இந்தியா
மறந்துடாதீங்க மக்களே.. குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில், 1978-ம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து விடுவது கட்டாயம் ஆகும்.
2019-ம் ஆண்டு வரை போலியோ சொட்டு மருந்து ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்பட்டு வந்தது. சென்ற ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறைதான் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, சனிக்கிழமை இந்திய குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், சத்துணவு மையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலிடோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
முன்னதாக ஜனவரி 17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோரானா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டதால் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெறும். இன்று போட சொட்டு மருந்து பெற முடியாத குழந்தைகளுக்கு நாளை வீடு தோறும் சென்று வழங்கப்படும். இன்று தவறவிட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குப் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் சென்று போட்டுக்கொள்ளலாம்.
போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதால், இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.