சினிமா செய்திகள்
கூட்டணியில் இருந்தாலும் தனிச் சின்னத்தில்தான் போட்டி..!- சரத்குமார் அறிவிப்பு
கூட்டணியில் இருந்தாலும் சமத்துவ மக்கள் கட்சி தனிச் சின்னத்திலே தான் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் பிரசார வேலைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட்டணி அமைப்பதற்கும் கொடுத்து வருகின்றனர். பல சிறு கட்சிகளும் பெரிய கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியுள்ளார்.
நிர்வாகிகள் உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட மாவட்டம் தோறும் பயணித்து வருகிறார் சரத்குமார். அப்போது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், “அதிமுக கூட்டணியில் தான் சமுத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது என்பதை தமிழக முதல்வர் உறுதி செய்துள்ளார். இருந்தாலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதன் பின்னரே எங்களது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிப்போம்.
கூட்டணியில் தொடர்ந்தாலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம். சூழல் நிலைகளுக்கு ஏற்ப தமிழக அரசியலில் மூன்றாவது, நான்காவது அரசியல் கட்சிகள் உருவாக வாய்ப்பு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். சரத்குமார் உடன் தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்துக்கு அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பயணித்து வருகிறார்.
சின்னத்திரையில் இருந்து மெள்ள விலகி முழு நேர அரசியலில் கணவர் உடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளார் ராதிகா சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.