இந்தியா
வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு; உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்கும் – குடியரசுத் தலைவர்
நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகளால் எதிர்க்கப்படும் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை, மத்திய அரசு மதித்து நடந்து கொள்ளும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமானது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதனால், குடியரசுத் தலைவர் உரையுடன் அவை நடவடிக்கைகள் ஆரம்பமானது. நாடாளுமன்றத்தில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-
மத்திய அரசு, வேளாண் சட்டங்களை சுற்றியிருக்கும் சர்ச்சைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சமீபத்தில் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். அந்தப் பேரணியின் போது வன்முறை வெடித்தது. அதேபோல, குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நமது அரசியல் சட்ட சாசனம், பேச்சுரிமையை உறுதி செய்கிறது என்றால், அதே சட்ட சாசனம், சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள், தகுந்த முன் யோசனைகளுக்குப் பின்னர் தான் அமல் செய்யப்பட்டன. அதன் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் உடனடியாக பயனடைந்தனர். இவ்வாறு உரையாற்றினார் ஜனாதிபதி கோவிந்த்.
குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின் போது, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் டெல்லி போலீஸ், விவசாயிகள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டி, 19 எதிர்க்கட்சிகள் குடயரசுத் தலைவரின் உரையைப் புறக்கணித்துள்ளன. அதே நேரத்தில் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி உரையின் போது அவையில் இருந்து ‘ஜெய் கிசான், ஜெய் ஜவான்’ என்கிற கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள், வேளாண் சட்டங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.