தமிழ்நாடு
‘நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன்…’- Zoho சிஇஓ ஶ்ரீதர் வேம்பு
‘நேரடி அரசியலில் ஒரு நாளும் ஈடுபட மாட்டேன்’ என ஜோஹோ நிறுவனத்தில் சிஇஓ ஶ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
ஜோஹோ என்னும் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களை கிராமங்களிலும் நிறுவி இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர் ஶ்ரீதர் வேம்பு. இவருக்கு சமீபத்தில் தான் பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஊடகங்களில் தொழில், வேலைவாய்ப்பைத் தாண்டி அரசியல் கருத்துகளையும் முன் வைத்து வருகிறார் ஶ்ரீதர் வேம்பு.
இதனால் ஐடி துறையின் சிஇஓ ஒருவர் தமிழக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்ற செய்திகளும் உலவத் தொடங்கின. இதை மறுக்கும் வகையில் ஶ்ரீதர் வேம்பு விளக்கம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஶ்ரீதர் வேம்பு, “நான் ஒரு நாளும் நேரடி அரசியலில் ஈடுபடப் போவது இல்லை. இந்தியாவின் ஒரு கிராமத்தையாவது உலகத் தரம் வாய்ந்த பகுதியாக உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
அதற்காக மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து மக்களுடன் இணைந்து பயணிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழர் ஒரு சர்வதேச ஐடி நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கிறார் என்பதால் ஒருபுறம் கொண்டாடும் நெட்டிசன்கள் மறுபுறம் இவரது ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.