இந்தியா
15 லட்சம் ரகசியம்: போட்டுடைத்த பாஜக அமைச்சர் நிதின் கட்காரி!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. இந்த தேர்தலின் போது பாஜகவால் முன்வைக்கப்பட்ட மிகமுக்கியமான வாக்குறுதி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூபாய் 15 லட்சம் போடப்படும் என்பதாகும்.
ஆனால் தற்போது இந்த ஆட்சி முடிவடையும் நிலையில் உள்ளது, இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனை எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது இந்த 15 லட்சம் குறித்தான கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த நிதின் கட்கரி, உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அப்போது ஆட்சியைப் பிடிப்போம் என்பதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு வாக்குறுதிகள் வேண்டுமானாலும் அள்ளிக் கொடுங்கள் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற நம்பிக்கையில் ஜோடிக்கப்பட்ட வாக்குறுதிகளை அளித்தோம்.
ஆனால் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்துவிட்டோம். நாங்கள் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் வாக்குறுதிகளுக்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்திருக்காது. இப்போது மக்கள் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்துகிறார்கள் என சொல்லி சிரித்தார் அமைச்சர் நிதின் கட்காரி. இதனை தற்போது எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து விமர்சித்து வருகிறது.