செய்திகள்
ஊழல் குற்றவாளிக்கு நினைவிடம்… ஊழல்வாதி திறந்து வைக்கிறார்… மு.க.ஸ்டாலின்
தண்டனை பெற்றவருக்கு நினைவிடம், திறந்து வைப்பவர் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…
சென்னை கிண்டியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பின் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெ., மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து 42 மாதங்கள் ஆகிவிட்டது. விசாரணையை கேட்டவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். அவருக்கு ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
ஜெயலலிதா மரணத்திற்கு விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா எனக் கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின். மேலும் தண்டனை பெற்றவருக்கு நினைவிடம், அதைத் திறந்து வைப்பவர் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர் என விமர்சித்து பேசினார்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன், வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.