சினிமா செய்திகள்
புகைப்படம், பெயர் எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை… அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தளபதி!
நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தனது பெயர், புகைப்படம் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனத் தடை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய்-ன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியையும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் உருவாக்கினார். ஆனால், உடனடியாக நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சி-க்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், “தந்தை எஸ்.ஏ.சி ஆரம்பித்துள்ள கட்சியிலோ அல்லது அமைப்பிலோ எந்த ரசிகர்களும் மக்களும் சேரத் தேவையில்லை. கட்சி, அமைப்பு என எதனுடனும் எனக்குத் தொடர்பு இல்லை. ரசிகர்கள் அமைப்பு, கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம். எனது தந்தை ஆரம்பித்தார் என்பதற்காக ரசிகர்கள் அவருக்குப் பணியாற்றத் தேவையில்லை” எனத் தனக்கும் தனது தந்தை ஆரம்பித்துள்ள அமைப்பு, கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இதன் பின்னர் கடந்த சனிக்கிழமை அன்று நடிகர் விஜய் தனது அப்பாவுக்கு ஒரு நோட்டீஸை அனுப்பி உள்ளார். அதில், ‘எஸ்.ஏ.சந்திரசேகரின் எவ்வித நடவடிக்கைகளுக்கும் விஜய் அனுமதியோ ஒப்புதலோ அளிக்கவில்லை. கட்சியிலும் அமைப்பிலும் விஜய் பெயரோ அல்லது புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது. ஏற்கெனவே ஒப்புதல் இன்றி பயன்படுத்திய காரணங்களுக்குத் தற்போது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில், ‘நான் 1993-ம் ஆண்டு நடிகர் விஜய்-க்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன். ஆனால் அன்று அவரிடம் நான் எந்தவொரு அனுமதியையும் கேட்கவில்லை. அதேபோல் தான் இன்றும். எனக்கு அந்த நடிகரைப் பிடித்திருக்கிறது. நான் அமைப்பு, கட்சி என ஆரம்பித்துள்ளேன்’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.