தமிழ்நாடு
கொரோனா மட்டுமல்ல… இத்தனை உடல் பாதிப்புகளுடன் இருக்கிறார் சசிகலா..! – விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு முழு உடல் சோதனை செய்யப்பட்டு, உடலில் உள்ள பிரச்சனைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மருத்துவமனை சசிகலாவின் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’66 வயதாகும் சசிகலா நேற்று மதியம் 2:30 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் தொண்டைப் பகுதியில் அதீத பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றும் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பது இரவு 9:30 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவருக்கு கோவிட்-19 தொற்றுடன் காய்ச்சல் இருக்கிறது. மேலும் இரண்டாம் நிலை நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் தைராய்டு பிரச்சனைகளும் உள்ளன. கோவிட்-19 வழிமுறைப்படி தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்’ என்று இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் விக்டோரியா மருத்துவமனைத் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
அரசு மருத்துமவனையில் சசிகலாவுக்கு சரி வர சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்று அவரது உறவினர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், சசிகலாவின் நிலை குறித்து கூறும் போது, ‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து 12 மணி நேரம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இதுவரை அவரை நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. அவருக்கு யார் மருத்துவம் செய்து வருகிறார் என்பது கூட எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் எடுப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால், மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக சொல்கிறார்கள். சரி, மேல் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்றாலும், யாரும் சரி வர தகவல்களை சொல்ல மறுக்கிறார்கள். உண்மையில், எங்களுக்கும் இதுவரை செவி வழிச் செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. முறையான தகவல்கள் வரவில்லை’ என்று விரக்தி மன நிலையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திவாகரன் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், ‘சசிகலாவின் உயிருக்கு சிலரால் ஆபத்து நேர்ந்துள்ளது’ என்றார்.