தமிழ்நாடு
‘தாமரை சேத்துலதான் வளருது… அங்கிட்டு போ..!’- கலாய்த்து தள்ளிய திருமா
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தாமரை சேற்றில் மட்டும் தன் வளர்கிறது என்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், ‘அதிமுக, தமிழர்களுக்கு ஒரு மிகப் பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறது. பாஜகவை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பதன் மூலம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது அதிமுக.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவா, அல்லது அதிமுகவா என்கிற நிலை இருக்கிறது. இதை மாற்றி திமுகவா அல்லது பாஜகவா என்கிற நிலைக்குக் கொண்டு வர பாரதிய ஜனதா துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த இடத்திற்கு பாஜகவை நகர்த்திக் கொண்டிருப்பது அதிமுகதான். இது தமிழகத்துக்கு அதிமுக செய்யும் மிகப் பெரிய துரோகம். இதன் மூலம் அதிமுகவே அழிந்து போகும்.
இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி உணருகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. அவரது எண்ணமெல்லாம், தற்போதைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் தான் உள்ளது’ என்று ஆவேசமாக பேசினார்.