சினிமா செய்திகள்
ஊர்க்கோயிலை இடித்ததாக நடிகர் விமல் குடும்பம் மீது வழக்கு..! புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கவா?
நடிகர் விமல் குடும்பத்தார் மீது சொந்த ஊரில் ஒரு போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசங்க, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகை சூட வா, கலகலப்பு எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விமல். இவரது சொந்த ஊர் மணப்பாறை அருகில் உள்ள பன்னகொம்பு என்னும் ஊர். அங்கு நடிகர் விமலின் குடும்பத்தார் வாழ்ந்து வருகின்றனர். சொந்த வீட்டின் முன் ஒரு புறம்போக்கு நிலம் இருந்துள்ளது. அங்கு ஒரு சிறு தூண் எழுப்பி விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவதை அந்த ஊர் மக்கள் வழக்கமாகக் கொண்டு வந்துள்ளனர்.
அதன் பின்னர் சில காலங்களுக்கு முன்னர் அந்த விளக்குத் தூண் இருந்த இடத்தில் சிறு கோயிலைக் கட்டமைத்து வழிபட்டு வந்துள்ளனர் பன்னக்கொம்பு ஊர் மக்கள். ஆனால், சமீபத்தில் திடீரென பொக்லைன் இயந்திரம் உடன் சில ஆட்கள் வந்து கோயிலை இடித்து விட்டுள்ளனர். இந்தக் கோயிலை முன் பின் தெரியாதவர்களைக் கொண்டு நடிகர் விமல் குடும்பத்தார் தான் இடித்துள்ளனர் என அந்தக் கோயிலின் பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விமலோ அல்லது அவரது குடும்பத்தாரோ இந்த கோயில் இடிப்பு விவகாரத்தில் ஈடுபட்டாரா அல்லது அப்பகுதியினர் சொல்வது போல ஆக்கிரமிப்புக்காக உண்மையிலேயே இடித்தார்களா என்பது குறித்து இதுவரையில் உறுதியாகத் தெரியவில்லை. இது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். நடிகர் விமலுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம்.