தமிழ்நாடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ‘நான் ஆஜராக தயார்!’- ரஜினி திடீர் மனு
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலைக்கு எதிராக பெருந்திரளான மக்கள், போராட்டம் செய்தனர். போராட்டம் தொடர்ச்சியாக தீவிரமடைந்த நிலையில் தமிழக காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதனால் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி, அருணா கெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘இந்தப் போராட்டத்தில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள். அதனால் தான் போலீஸ் அதீத நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று’ என்று பரபரப்பான கருத்தை தெரிவித்தார். ரஜினி, எதன் அடிப்படையில் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர் என்று சொல்கிறார் என்கிற சந்தேகம் அப்போதே கிளப்பப்பட்டது.
இந்நிலையில் அருணா கெகதீசன் தலைமையிலான ஆணையம், ரஜினியை நேரில் ஆஜராகி, அவரது கருத்துக்கு விளக்கம் கொடுக்கச் சொன்னது. அதைத் தவிர்த்து வந்த ரஜினி, தற்போது காணொலிக் காட்சி மூலம் விசாரணை ஆணையத்துக்கு முன்னர் ஆஜராக தயார் என்று தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அவர் ஆணையத்தின் முன்னர் ஆஜராவார் எனத் தெரிகிறது.