வைரல் செய்திகள்
நடு ரோட்டில் மைக்கெல் ஜாக்சன் ஸ்டெப்… நடனமாடி அசத்தும் டிராஃபிக் போலீஸ்! #Video
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் டிராஃபிக் கான்ஸ்டபிளாக இருப்பவர் ரஞ்சீத் சிங். அவர் நகரின் முக்கிய பகுதிகளில் டிராஃபிக்கை நிர்வகிக்கும் போது, பாப் கிங் மைக்கெல் ஜாக்சன் போல நடனமாடி தன் கடமையைச் செய்கிறார். நடு ரோட்டில் ரஞ்சீத் சிங், இப்படி நடனமாடி டிராஃபிக்கை சீராக வழி நடத்துவதும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த விஷயம் கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு சோகக் கதையும் உள்ளது. ‘நான் எனது பணியில் நடனமாட ஆரம்பித்து 16 ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு முறை நான் நிர்வகிக்கும் சாலையில் விபத்து நடந்து விட்டதாக எனக்குத் தகவல் வந்தது. அங்கு நான் விரைந்து சென்று பார்த்தேன். அந்த விபத்தில் இறந்து கிடந்தது எனது நண்பர் என்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். அப்போது செய்வதறியாமல் கடும் சோகத்தில் நான் சாலையைக் கடந்து வந்தேன். அந்த நேரத்தில் எனது மூத்த அதிகாரி, நீ உன் பணியை செய்யும் விதத்தால் மக்கள் சரி வர டிராஃபிக்கில் செல்ல முடிவதில்லை என்றார். அப்போது தான் மைக்கெல் ஜாக்சன் நடனங்களை எனது பணியில் புகுத்தினேன்’ என்று தன் பின் கதையை விளக்கினார்.
Indore’s traffic constable Ranjeet Singh has been using ‘moonwalk’ to control the traffic for nearly 16 years, he got famous on social media because of his unique style of performing his duty however, a tragic story behind his mirth at work @ndtv @ndtvindia @vinodkapri pic.twitter.com/t72p6wtavZ
— Anurag Dwary (@Anurag_Dwary) January 18, 2021
ரஞ்சீத் சிங்கிற்கு சின்ன வயது முதலே நடனம் என்றால் அலாதி பிரியம். தான் ஒரு மிகப் பெரிய நடனக் கலைஞராக உருவெடுக்க வேண்டும் என்று ரஞ்சீத்திற்கு கனவு இருந்தது. ஆனால் வறுமை வாழ்க்கையில் விளையாடி விட்டது. அதனால் கனவை அவரால் துரத்த முடியவில்லை. அதே நேரத்தில் அந்த நடனக் கனவை அவரால் முழுதாக துறக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடே தற்போது தான் பார்த்து வரும் டிராஃபிக் போலீஸ் வேலையிலும் அதைப் புகுத்தியுள்ளது.
‘என் நடனம் மூலம் டிராஃபிக்கை என்னால் திறம்பட கையாள முடிகிறது. சாலைகளி்ல் மக்கள் மிகவும் எதிர்மறையான எண்ணங்களுடன் வருவது உண்டு. ஆனால், அவர்கள் என்னைப் பார்த்தால் நன்றாக உணருகிறார்கள்’ என்று பெருமை ததும்ப சொல்கிறார் ரஞ்சீத்.
இப்படி பணியின் போது டான்ஸ் ஆடுவது குறித்து இந்தூரின் கூடுதல் எஸ்.பி பிரசாந்த் சவுபி, ‘ரஞ்சீத் தன் பணியை சரியாக செய்கிறார். அவர் எப்போதெல்லாம் பணியில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் டிராஃபிக் சீராக செல்கிறது. அவரிடம் ஒரு ஆரா உள்ளது. அதனால் மக்கள் அவரைப் பார்த்தால் நன்றாக நடந்து கொள்கிறார்கள். அவர், யாரையாவது நிறுத்தினால் எவரும் சண்டையிடுவதில்லை’ என்று விளக்குகிறார்.
ரஞ்சீத் சிங், தனது நடனங்களுக்காக மிகவும் பிரபலமடைந்துள்ளார். அதற்காகவே பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். அவருக்குப் பல்வேறு விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.