வைரல் செய்திகள்
கூகுள் பே, போன் பே மூலம் மொய் வசூலிப்பு… டிஜிட்டல் ஆன மதுரை கல்யாணம்..!
மதுரையில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் வீட்டார் டிஜிட்டல் முறையில் மொய் பணத்தை வசூல் செய்த செய்தி வைரல் ஆகி வருகிறது.
மதுரையில் திருமணம் என்றாலே மொய் பண வசூல் முக்கியப் பங்கு வகிக்கும். மொய் பணத்தை எப்படி எப்படி எல்லாம் வசூல் செய்யலாம் என்பதை புதிது புதிதாகக் கண்டுபிடித்து தமிழகத்துக்கே ஐடியா கொடுப்பார்கள். இந்தியா முழுவதும் டிமானடைசைசேஷன் என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது கூட வங்கிப் பரிவர்த்தனை மூலம் ஒரு வாரம் கழித்துக்கூட மொய் பணத்தை கொடுக்கும் வசதியை விருந்தினர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஐடியாவையும் மதுரை மக்கள் ஏற்படுத்தினர்.
தற்போது கொரோனா கட்டுப்பாட்டால் திருமணங்கள் நடத்த பல கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இந்த சூழலில் கூட்டத்தில் முண்டி அடித்து மக்கள் மொய் பணம் செலுத்துவதைத் தவிர்க்க டிஜிட்டல் மொய் வசூலை மதுரையில் திருமண வீட்டார் அறிமுகம் செய்துள்ளனர். மொய் வசூலிக்கும் இடத்தில் ஜி பே என்ற கூகுள் பே, போன் பே ஆகியவற்றுக்கான கோட் வைத்து விருந்தினர்கள் அதை ஸ்கேன் செய்து மொய் பணத்தை அளிக்கலாம் என்ற ஐடியாவை அமல்படுத்தி உள்ளனர்.
இதுபோக, மொய் வசூலிக்கும் இடத்திலும் கூட்டத்தைத் தவிர்க்க திருமண அழைப்பிதழிலேயே கூகுள் பே மற்றும் போன் பே-க்கான ட்ஜிட்டல் ஸ்கேன் கோட் அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு வராதவர்களும் கூட திருமண அழைப்பிதழின் வாயிலாகவே மொய் பணத்தை செலுத்திவிடலாம். மதுரையில் நடந்த இந்த நூதன திருமண மொய் வசூல் ஐடியா தற்போது வைரலாகி வருகிறது.