சினிமா செய்திகள்
வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி.. காவல்துறைக்கு பயந்து மன்னிப்பு கேட்ட பரிதாபம்!
நடிகர் விஜய் சேதுபதி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பட்டாக்கத்தி கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களும் பட்டாக்கத்தி கையில் ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுக்கு முன்பு பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி பீனுவை போலீசார் என்கவண்டர் லிஸ்டில் சேர்த்தனர். அதன்பிறகு அந்த ரவுடி போலீசில் சரணடைந்தார். சென்னையில் தொடங்கிய இந்த பட்டாக்கத்தி கலாச்சாரம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. சேலம் ஜூசஸ், ஸ்ரீரங்கம் அன்பு என பலரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இன்று தனது பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தனது செயலுக்கு விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. எனது பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டியிருப்பேன்.
தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டா கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால் அந்தப் படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகியுள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’
இவ்வாறு கூறியுள்ளார்