தமிழ்நாடு
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளது: எம்எல்ஏ அதிரடி பேட்டி!
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி.
நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரெத்தினசபாபதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கருணாசை சந்தித்ததால் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவில்லை. அப்படி வந்தால் பதில் சொல்ல தயாராகவே இருக்கிறேன். இதை வைத்து ஏற்கனவே 18 பேரை ஜனநாயக படுகொலை செய்தது போல என்னையும் படுகொலை செய்ய முடியாது. செய்ய விடமாட்டோம் என்றார்.
சூளூர் எம்எல்ஏ கனகராஜ் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பேசிவருகிறாரே அப்படி ஒரு நிலை வந்தால்? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலில் அந்த முயற்சியை எடுத்தவன் நான். ஆனால் இனி அது சாத்தியமில்லை. அந்த சாக்கடையில் கலக்கமாட்டோம். ஒபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளது. நாங்களும் அங்கே போய் விழமாட்டோம். இன்றைய தமிழக மக்களின் நம்பிக்கை டிடிவி மேல் தான் உள்ளது. அதனால் அவர் கரம் தான் வலுப்படும் என்றார்.