தமிழ்நாடு
விஜயகாந்த் மகனுக்கு திமிரு ஜாஸ்தி: முதல் அரசியல் பேச்சு!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் குதித்துள்ளார். அவரது முதல் அரசியல் மேடை பேச்சு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரங்கேறியது. இந்த கூட்டத்தில் பேசிய அவர் மிகவும் தில்லாக பேசினார்.
தேமுதிகவின் 14-வது ஆண்டுவிழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதன்முதலாக விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசப்போகிறார் என்றதும் கூட்டத்தினரிடையே ஒரு ஆர்வம் இருந்தது.
இதில் அவர் விஜயகாந்த் போலவே ரொம்ப இயல்பாகவே பேசினார். தன்னுடைய முந்தையகால நிகழ்வுகள் குறித்து பேசிய விஜய பிரபாகரன், எனக்கு பிடிச்சதையெல்லாம் செய்யறதுக்கு அனுமதி கொடுத்தது அப்பா, அம்மாதான். தெரிஞ்சோ தெரியாமலோ இப்ப எனக்கு பிடிச்ச இடத்தில்தான் வந்து நிற்கிறேன். இரண்டு தொழில் எடுத்தேன். வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். பார்க்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கு பிரபாகரன் என்று அப்பா பெயர் வைத்தார். எல்லோரும் சொல்லுவார்கள் இலங்கை பிரபாகரனை நினைத்துதான் அப்பா பெயர் வைத்தார் என்று. அந்த பெயரை காப்பாற்றுவேன் என்று சத்தியம் செய்கிறேன் என்றார்.
நான் ஒரு இளைஞனாக தனியாக எதுவும் செய்ய முடியாது. என் கூட பல லட்சம் இளைஞர்கள் வரவேண்டும். என்னை நீங்க விஜயகாந்த் பையனா பாக்காதீங்க. உங்க ப்ரண்டா பாருங்க. ஹாய் ப்ரோ, என்ன மச்சான், என்ன மாமா என்ற அந்த லெவலில் பாருங்க. சேர்ந்து கைகொடுங்கள். கண்டிப்பாக சாதிப்போம். எனக்கு திமிரு ஜாஸ்தி. ஆணவ திமிரு இல்ல, திரும்பவும் சொல்கிறேன். தேமுதிக அடுத்த முறை ஆட்சியை அமைக்கும். ஏனென்றால் இங்கு வரவேற்பு அப்படி, கூட்டம் அப்படி, பிரபாகனாக உங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்வேன்.
இறுதியாக தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். நமது முரசு, நாளை அரசு. விடைபெறுகிறேன், வணக்கம் என கூறி முடித்தார் விஜய பிரபாகரன்.