சினிமா செய்திகள்
சிம்பு படத்துக்கு இனி எந்த ஒத்துழைப்பும் கிடையாது- கண்டிப்புடன் சொல்லும் தயாரிப்பாளர்கள் சங்கம்
சிம்பு திரைப் படங்களுக்கு இனி வரும் காலங்களில் எவ்வித ஒத்துழைப்பும் தரப் போவது இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் இன்று வெளியானது. ஆனால், நேற்று நள்ளிரவு வரையில் ஈஸ்வரன் படம் திரைக்கு வருமா என்ற கேள்வி நீடித்துக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக ஈஸ்வரன் தயாரிப்பித் தரப்பினர் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து பேசி பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்தனர்.
இதன் பின்னரே ஈஸ்வரன் படம் இன்று காலையில் வெளியானது. ரசிகர்கள் உற்சாகமானாலும் சிம்புவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் தொடரும் என்றே கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து இனி ஒத்துழைப்பு எதுவும் கொடுக்கக் கூடாது என தீர்மானமே நிறைவேற்றி உள்ளனர். இதன் மூலம் அடுத்தடுத்து சிம்பு படங்கள் கமிட் ஆனாலும் ஒவ்வொரு படத்துக்கும் இதுபோலத் தான் பிரச்னைகள் எழும் என்றும் படம் வெளியாவதில் ஒவ்வொரு முறையும் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தனது மகன் சிம்புவின் படங்களுக்குத் தொடர்ந்து சிக்கல் எழக் காரணம் என டி ராஜேந்தர் கூறுகையில், “நான் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தலில் போட்டியிட்டேன். அதில் சிலருக்குக் கடுப்பு ஏற்பட்டுள்ளது. என்னைப் பழிவாங்க ஒரு மாஃபியா கும்பலே ஈடுபட்டு வருகிறது. இந்த மாஃபியா கும்பலால் மட்டுமே சிம்பு படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சிம்புவின் படத்தை முடக்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அந்த கும்பல் மேற்கொண்டு வருகிறது” என்றுள்ளார்.