தமிழ்நாடு
‘அதிமுக-வில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதா?’- கொதி கொதித்த அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக-வில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 26-ம் தேதி விடுதலை அடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சமீபத்தில் அதிமுக-வின் கோகுல இந்திரா சசிகலாவுக்கு ஆதரவாக ‘அதிமுக-வின் தலைவராக பதவி வகித்த ஒருவரைக் கடைசியுடந் மரியாதை உடனே நடத்த வேண்டும். அவரை யார் அவமரியாதையாகப் பேசினாலும் அதனை ஏற்க முடியாது. அவர் மரியாதையுடன் போற்றப்படக் கூடியவர்” எனத் தெரிவித்தார்.
இதற்கு அதிமுக-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்ற அமமுகவினர் நமக்கு தம்பியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெளிவு இல்லாமல் இருக்கிறார். அதேபோல் வேறு சிலரும் அமமுக-வினருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.
அதிமுக-வில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் பேசக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இருக்கக் கூடாது. சசிகலா வருகை தமிழக அரசியலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்றார்.