உலகம்
‘வணக்கம்’ சொல்லி தழிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன இங்கிலாந்து பிரதமர்!
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகை நாள் பொங்கல். தமிழர்களின் புத்தாண்டாகவும், உழவர்களின் திருநாளாகவும் கொண்டாடப்படுவது பொங்கல். உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் இன்று இயற்கைக்கு நன்றி தெரிவித்து, புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்பார்கள்.
பொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழர்கள் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வது வழக்கம்தான். ஆனால், இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழில் வணக்கம் என்று சொல்லி, தனது பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது பலரைக் கவர்ந்துள்ளது.
I want to wish Tamils in the UK and around the world a happy Thai Pongal. pic.twitter.com/GCROsgqI9d
— Boris Johnson (@BorisJohnson) January 13, 2021
அவர், ‘வணக்கம். பிரிட்டனில் இருக்கும் தமிழ்ச் சமூகத்தினருக்குத் தைத் திருநாள் வாழ்த்துகள். இயற்கைக்கு நீங்கள் நன்றி செலுத்தும் இன்னாளில், கோவிட் தொற்றுக்கு எதிராக உங்களின் செயல்பாடுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருந்தொற்று காலத்தில் உங்களின் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் சமூக ஊக்கம் நன்றாக தெரிந்தது.
கொரோனா போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் தமிழ் மருத்துவர்கள், தொழில் மூலம் மீண்டும் பொருளாதாரத்தை நீங்கள் மீட்க உதவியது மற்றும் உங்களின் பல்வேறு தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த நேரத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாட முடியாத சூழல் இருக்கிறது. இருப்பினும் அதிலிருந்து நாம் மீண்டு வருவோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பானைகளில் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கட்டும்’ என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.