இந்தியா
டெல்லி போராட்டத்தில் உள்ளவர்கள் போலி விவசாயிகள்.. பாஜக எம்பி கண்டுபிடிப்பு
டெல்லி விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் போலி விவசாயிகள் என்று கர்நாடக பாஜக எம்பி முனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக அசாம், பஞ்சாப், உத்திரப்பிரதேச உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் டெல்லி எல்லைக்குள் அனுமதிக்கப்படாததால், அங்கேயே தங்கியிருந்து போராடி வருகின்றனர். மேலும், மூன்று வேளை உணவுகள் சமைத்தும், ஜிம் பயிற்சி மேற்கொண்டும் போராட்டத்தில் உள்ளனர். மற்ற மாநிலங்களிலும் அம்மாநிலங்களுக்குள்ளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உள்ளவர்கள் போலியானவர்களே என்று கர்நாடக பாஜக எம்பி முனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டெல்லியில் போராடும் விவசாயிகள் பீட்சா, பர்கர் சாப்பிடுகிறார்கள், ஜிம் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இவர்கள் யாவரும் விவசாயிகள் இல்லை. காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட போராட்டக்காரர்கள் தான். சமூக விரோதிகள் பணம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர்’ இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இதில் விவசாயிகள் மட்டும் இல்லாமல் தன்னார்வலர், தொண்டு நிறுவன ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பங்கேற்று உள்ளனர்.