தொழில்நுட்பம்
பேராசையால் வீழ்ந்த வாட்ஸ்அப்.. இப்போது நம்பர் ஒன்னாக இருப்பது எது தெரியுமா?
![WhatsApp - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/WhatsApp.jpg)
வாட்ஸ்அப் நிறுவனத்தின் கெடுபிடியான புதிய கொள்கைளைப் பிடிக்காததால், பெரும்பாலான பயனர்கள் மாற்று செயலியை நோக்கி படையெடுத்து விட்டனர். இதனால் இப்போது நம்பர் ஒன் செயலியின் இடத்தில் இருந்து வாட்ஸ்அப் பின்தங்கி விட்டது.
வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அதன் விதிகள், நிபந்தனைகள், கொள்கைகளைப் புதுப்பித்தது. இது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் சேமித்து, அதனை அணுகும் விதமாக அமைந்தது. மேலும், இந்தப் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்றும் கெடுவிதித்தது.
இதன் காரணமாக வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் மட்டுமே என்ன விதிகள் என்று தெரியாமலே அதனை ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலானனோர் வாட்ஸ்அப்பிற்கு பதிலாக வேறுஏதாவது செயலி இருக்கிறதா என்று தேடத்தொடங்கி விட்டனர்.
இதனிடையே வாட்ஸ்அப்புக்கு பதிலாக ‘சிக்னல்’ செயலியைப் பயன்படுத்துமாறு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவுறுத்தினார். அவரை 4 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்வதால், ஒரே நாளில் சிக்னல் செயலியின் பயனர்கள் அதிகரித்தது. இந்தியா உள்ளிட்ட பலதரப்பட்ட நாடுகளிலும் சிக்னல் செயலி பக்கம் அதிக மக்கள் சென்று விட்டனர்.
இதனால் வாட்ஸ்அப்பை முந்தி சிக்னல் செயலி தற்போது முதலிடத்தில் வந்து விட்டது. வாட்ஸ்அப்பில் இருக்கும் கெடுபிடிகள் எதுவும் சிக்னல் செயலியில் இல்லை, மாறாக பயனர்களின் விருப்பப்படியும், அரசு நெறிமுறைகளைப் பின்பற்றியும் சிக்னல் செயலி செயல்பட்டு வருகிறது.