தமிழ்நாடு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
![Rain - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/Rain.jpg)
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.
இதே போல், நெல்லை, புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர் மழையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.