தமிழ்நாடு
2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு இப்போதும் ஏற்படுமா?: என்ன சொல்கிறார் ரமணன்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.
அப்போது தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பயமும், பல்வேறு தகவல்களும் பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் மிக அதிகமான மழை பெய்து சென்னையே சின்னாபின்னமானது. தனித்தீவாக காட்சியளித்தது.
பல்வேறு சேதங்கள், உயிரிழப்புகள் அந்த மழை வெள்ளத்தின் போது ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை வாசிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இதனையடுத்து இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணனிடம் 2015-ல் வெள்ளம் ஏற்பட்டபோது உண்டான பாதிப்புகள் போன்று இப்போதும் இருக்க வாய்ப்பிருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரமணன், இத்தனை நாட்கள் மழை இல்லாததால் பூமி காய்ந்திருக்கும். மழை வரும்போது பூமியை அதை உள்வாங்கிக்கொள்ளும். இரண்டாவது, மழையால் மட்டும் வெள்ளம் ஏற்படாது. அது ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. ஆதலால் அவையனைத்தும் வைத்துதான் தீர்மானிக்க முடியும் என்றார்.