தமிழ்நாடு
தமிழகத்தில் 12ம் தேதி வரை மழை பெய்யும்!
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை பகுதியை ஒட்டி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை வரும் 12 ஆம் தேதி வரையில் நீட்டிக்கும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, காரைக்கால், தஞ்சாவூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஜன. 9 ஆம் தேதி மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.