தமிழ்நாடு
திமுகவில் புதிதாக உதித்த NRI அணி – இதுதான் காரணமாம்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதியதாக என்.ஆர்.ஐ அணி உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் கழக சட்டத்திட்டத்தின் கீழ் ‘வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி’ என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது. இதன் அணிச் செயலாளராக டி.ஆர்.பிராஜா இருப்பார். இணைச் செயலாளர்களாக டாக்டர் செந்தில்குமார் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திமுகவில், சுற்றுச்சூழல் தொடர்பாக அதிகமாக பணியாற்ற வேண்டும் என்னும் நோக்கில் ‘திமுக சுற்றுச்சூழல் அணி’ என்கிற புதிய கிளை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இன்று என்.ஆர்.ஐ அணி என்கிற புதிய கிளை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் திமுக தொடர்ந்து புதுப் புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.