தமிழ்நாடு
ஜனவரியில ஏன் இவ்ளோ மழை பெய்து..?- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்
தமிழகத்தில் ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழக மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையிலும் வரலாறு காணாத மழை பொழிவு இருந்து வருகிறது. இந்த மழையானது, வரும் 12 அல்லது 13 ஆம் தேதி வரை தொடரும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, வட கிழக்குப் பருவமழையானது அக்டோபரில் ஆரம்பித்து, பெரும்பாலும் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், இப்போது ஜனவரி பிறந்தும் மழை பெய்து வருகிறது. இது எதனால் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.
அது குறித்து பிரபல வானிலை வல்லுநர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் கூறுகையில், ‘சென்னையைப் பொறுத்தவரை கடந்த 1915 ஆம் ஆண்டும், இதைப் போன்று வரலாற்று மழை பெய்தது. அப்போது ஜனவரி மாதத்தில், ஒரே நாளில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பெய்தது. அன்று அது புயல் சார்ந்த மழையாக இருந்தது. இன்று 100 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. ஆனால் இன்று நமக்குப் பெய்துள்ளது புயல் சார்ந்த மழையோ, காற்றழுத்த தாழ்வுப் பகுதி சார்ந்த மழையோ கிடையாது. இது ஈஸ்டர்லி வேவ்ஸ் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் மழையாகும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கலப்பட்டில் தான் இந்த மழைப் பொழிவு மிக அதிகமாக இருந்து வருகிறது. 8 ஆம் தேதி வரை இந்த மழை தொடரும். பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு மீண்டும் மழையை எதிர்பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.