தமிழ்நாடு
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய வசதி : வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தல்களில் ராணுவ வீரர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகள் மூலமாக தங்கள் வாக்கினை பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது. இதே போல் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த சூழலில், கடந்த, நவம்பர் 27 ஆம் தேதி சட்டத் துறை செயலருக்கு தேர்தல் கமிஷன் கடிதம் ஒன்று எழுதியது. அதில், ராணுவ வீரர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களை போல் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டது
தற்போது இந்த கோரிக்கையை ஏற்ற வெளியுறவு அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் ஓட்டு போட முடியும்.பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் மேற்கூறிய ஒப்புதல் என்.ஆர்.ஐ மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.