தமிழ்நாடு
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு!
![Rain - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Rain.jpg)
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 6-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்குத் திசையில் சென்றுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 5-ம் தேதி காலை 8.30 மணி முதல் 6-ம் தேதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும் புதுவையிலும் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது குமரிக் கடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்குச் சுழற்சி தெற்கு மகாராஷ்டிரா வரை நீடிக்கிறது.
மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.