இந்தியா
கேரளாவுக்கு மீண்டும் ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கடந்த நூற்றாண்டுகளில் கேரளா சந்திக்காத பெரும் இயற்கை பேரழிவை கேரளா சமீபத்தில் சந்தித்தது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே தடம் புரண்டது. ஒட்டு மொத்த தேசமே கேரளாவை பார்த்து கண்ணீர் வடித்தது. நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் கேரளாவை நோக்கி உதவிக்கரம் நீண்டது.
இந்நிலையுல் தற்போது தான் கேரளாவில் இயல்பு வாழ்க்கை மீண்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது மீண்டும் கேரளாவில் மிக மிகப் பெருமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 6-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கேரளாவுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று கேரளாவின் திருச்சூர், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மிகப் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் நாளை காலை 8.30 மணி முதல் நாளை மறுநாள் காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும் புதுவையிலும் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.