தமிழ்நாடு
பிப். 2 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம்!
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி கடந்தாண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்தாண்டு இறுதியில் பெரும் போராட்டத்தை நடத்தினர். பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலரின் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், அந்த வழக்கை திரும்பப் பெற கோரி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 2 ஆம் தேதி அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில சங்க தலைவர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ‘மாநிலம் முழுவதும் 5,608 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பென்சனும் தடை போகிறது. எனவே, இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும்.
இதற்காக ஜன.5 முதல் மாநில அளவில் பிரச்சாரமும், அதைத் தொடர்ந்து மண்டல அளவில் ஆயத்த போராட்டமும் நடைபெறும். பின்னர், பிப்.2 ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.