தமிழ்நாடு
கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு அரசியல் பின்னணி!
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும், முதல்வரை விமர்சித்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் கருணாஸ்.
அதன் பின்னர் தினகரன் ஆதரவு எம்எல்ஏவை சந்தித்த கருணாஸ் மீண்டும் ஆளும் தரப்புக்கு எதிராக விமர்சித்தார். இதனையடுத்து கருணாஸை மற்றொரு வழக்கின் கீழ் கைது செய்ய நெல்லை போலீசார் திட்டமிட்டிருந்தனர். அவரது வீட்டையும் இன்று காலை போலீசார் நீண்ட நேரமாக சோதனையிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை நெஞ்சுவலியால் அவதிப்பட்ட கருணாஸ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் இன்று நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமீனுக்கான கையெழுத்து போட வரவில்லை. அவர் மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கான சான்றிதழை அவரது வழக்கறிஞர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் சமர்ப்பித்தார்.