கிரிக்கெட்
INDvAUS – ‘இப்ப ரஹானேதான் பெஸ்டுனு சொன்னா…’- கோலியை சீண்டும் கவாஸ்கரின் பேச்சு
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் அஜிங்கியே ரஹானே. தன் மனைவி அனுஷ்கா ஷர்மா, இன்னும் ஒரு சில நாட்களில் தங்களது முதல் குழந்தைப் பெற்றெடுக்க உள்ளதால், அவருடன் இருக்க விராட் கோலி, இந்தியா திரும்பியுள்ளார். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, படுதோல்வியடைந்துள்ள காரணத்தினால், கோலி தாயகம் திரும்பியுள்ளது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
இப்படி இக்கட்டான சூழலில் இரண்டாவது டெஸ்டில் அணியையும் சரியாக வழிநடத்தி, தானும் பேட்டிங்கில் சாதித்துள்ளார் ரஹானே. இரண்டுவது டெஸ்ட், தற்போது மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா, அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 277 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து களத்தில் இருக்கிறது. ரஹானேவின் சதத்தால், இந்தியா வலுவான நிலையில் இருக்கிறது. சதம் விளாசி அசத்தியுள்ள ரஹானேதான், இனி அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழ்ந்துள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இது பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ‘ரஹானேவிடன் உடல் மொழியில்தான் ஆக்ரோஷம் தெரியவில்லையே தவிர, அவரின் யுக்திகள் மிக ஆக்ரோஷமாக உள்ளன. இப்போதே அவரது கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது என்று நான் சொன்னால், மும்பையைச் சேர்ந்த ஒருவனுக்கு நான் ஆதரவளிப்பது போல பேசப்படும். நானும் மும்பைக்காரன் என்பதனால் இந்த விமர்சனம் என் மீது விழும்’ என்று சூசகமாக கோலியை சீண்டும் வகையில் கருத்து கூறியுள்ளார். இது கிரிக்கெட் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.