உலகம்
நைஜீரியாவில் அதிவேகத்தில் பரவும் Corona-வின் அடுத்த வகை!
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் பரவியிருக்கக் கூடும் என்கிற அதிர்ச்சிகர தகவலை உலக சுகாதார அமைப்புத் தரப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. தற்போது கொரோனாவின் வேறு வகையிலான புதுவகை வைரஸ், ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் இந்தப் புதுவித வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆப்ரிக்க நோய்த் தடப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம், ‘இதுவரை இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் புதுவித கொரோனா வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது முற்றிலும் வேறு வகையிலானது. இந்த வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவுகிறது. இதன் தாக்கங்கள் எப்படியிருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்’ என்று கூறியுள்ளது.
முன்னதாக இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் மேட் ஹேங்காக், ‘கொரோனாவின் இந்த புது வகை கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. முன்னர் இருந்த வைரஸைவிட இது 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது’ என்று கூறினார்.