தமிழ்நாடு
‘சென்னையில் குப்பை கொட்ட கட்டணம்’- புதிய உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு!
![chennai corporation garbage - Bhoomitoday chennai corporation garbage](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Untitled-61.jpg)
சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அதாவது குப்பை கொட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.