தமிழ்நாடு
கலைஞர் ஆட்சிய தருவோம்னு ஏன் யாரும் சொல்றதில்ல?- உதயநிதி ‘நறுக்’ பதில்
தமிழக தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனும் கடந்த ஒரு வாரமாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தன் பிரச்சார சுற்றுப் பயணத்தை இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளார்.
இந்நிலையில், பிரதானக் கட்சிகளுக்கு இடையே வாதப் போர் நடந்து வருகிறது. இந்த முறை வாதத்துக்கு மையப் பொருள் ஆகியிருப்பது எம்.ஜி.ஆர். கமல் தனது பரப்புரைகளில், ‘நான்தான் எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு. நான்தான் எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்று கூறி வருகிறார். அதற்கு அதிமுகவினர், கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். பாஜகவினர், தங்கள் பொதுக் கூட்டங்களில் எம்.ஜி.ஆரின் படத்தையும் பயன்படுத்துகின்றனர். அதேபோல நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சிகள், ‘தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்ற முழகத்தை முன்னெடுத்துள்ளன.
இப்படி சொல்லப்பட்டு வரும் நிலையில், ‘கலைஞர் ஆட்சியை மீண்டும் நடத்துவோம்’ என்று திமுகவினர் மட்டுமே குரல் கொடுத்து வருகின்றனர். மற்ற கட்சிகளோ, களத்துக்குப் புதிதாக வருவோர்களோ கலைஞரை மேற்கோள் காட்டுவதில்லை. இது குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘கலைஞர் ஆட்சியை நாங்கள் அமைத்துக் காட்டுவோம் என்று யாரும் சொல்லாததற்கு காரணம், கலைஞர் ஆட்சியில் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். அதைத் தவிர்ப்பதற்கே யாரும் அப்படி சொல்வதில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.