தமிழ்நாடு
மக்களுக்கு அரசு, 2,500 இல்ல 5,000 ரூபாய் கொடுக்கணும்!- கணக்கு சொல்லும் கனிமொழி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான், தமிழக அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு 2,500 ரூபாய் அல்ல, 5,000 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி.
‘கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் பல மாதங்கள் தொடர்ச்சியாக லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலருக்குத் தாங்கள் பார்த்த வந்த வேலையும் பறிபோய்விட்டது. மக்களிடம் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இன்னமும் பலருக்கு சரியான வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான் தமிழக அரசு, பொங்களுக்கு 2,500 ரூபாய் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. கொரோனா லாக்டவுன் போடப்பட்டதிலிருந்தே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் பண நெருக்கடியை சமாளிக்க ஒரு குடும்பத்துக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், அப்படியொரு ஆக்கப்பூர்வமான திட்டத்தை செயல்படுத்த மனமில்லாத அரசு, 2,500 ரூபாய் மட்டும் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது’ என்று அதிமுக அரசின் அறிவிப்பை விமர்சித்துள்ளார்.