டிவி
சித்ரா மரணத்திற்கு முன் பதிவான சிசிடிவி காட்சிகள்… புதிய கோணத்தில் திரும்பும் விசாரணை!
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், ‘போலீஸ் விசாரணை ஒருதலைபட்சமாக இருக்கிறது. சித்ரா மரணம் தொடர்பாக அனைத்துக் கோணங்களில் விசாரணை செய்ய வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளார்.
இதையொட்டி அவர், சித்ரா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார். சித்ராவும் அவரது கணவர் ஹேம்நாத்தும் அம்பத்தூருக்கு அருகில் இருக்கும் ஓர் திருமண மண்டபத்தில், தங்களது திருமணத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த மண்டபத்தை இரு வீட்டுத் தரப்பும் சித்ரா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்று பார்த்துள்ளன. அப்போது ஹேம்நாத்தும் சித்ராவும் மண்டபத்தைப் பார்வையிடுகின்றனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஹேம்நாத் தரப்பில், சித்ராவின் நட்பு வட்டம் மற்றும் அவர் துறை சார்ந்த நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காவல் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்த சிசிடிவி வீடியோ காட்சியானது மேலும் பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. இதனால், விசாரணை வளையத்திற்குள் வேறு சிலரும் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.