தமிழ்நாடு
எச்.ராஜா வீடியோ லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டது: எஸ்.வி.சேகர் ஆதரவு!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதிமன்றத்தை குறித்தும் மோசமாக விமர்சித்தார். இந்த விவகாரம் வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதனையடுத்து எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. ஆனால் இன்றுவரை அவரை கைது செய்யவில்லை தமிழக காவல்துறை. அதே நேரத்தில் எச்.ராஜா தான் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். இந்நிலையில் எச்.ராஜாவுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகரிடம் எச்.ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எச்.ராஜா பேசிய வீடியோ வெளிநாட்டிற்கு சென்று லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டு திரும்பி வந்துள்ளது என்கிறார்கள். ஆகவே அதை கண்டுபிடிக்கக் கூடிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது. ஆகவே எச்.ராஜா கேஸை எச்.ராஜாவே டீல் பண்ணுவார். என்மீது போடப்பட்ட வழக்கை நான் படீல் பண்ணுகிறேன் என்றார்.