தமிழ்நாடு
‘பிக் பாஸ் பார்க்க நேரமில்லீங்க..!’- வருத்தப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குத் தனக்கு நேரமில்லை என தமிழக கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கும் கமலுக்கும் இடையில் தொடர்ந்து வார்த்தோப் போர் நடந்து வருகிறது. கமல், ‘நான் தான் மக்கள் திலகம் எம்ஜிஆரின் மீட்சி. நான் தான் அவரின் வாரிசு’ என்று சொன்னார். அதற்கு அதிமுகவினர், ‘கமல் வேண்டுமானால் எம்ஜிஆரை பின்பற்றட்டும். ஆனால், எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கமான அதிமுகவுக்குதான் அவர் சொந்தக்காரர். அவரை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது’ என்றனர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தால் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குடும்பமே கெட்டுப் போய்விடும். நாட்டில் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் அந்த நிகழ்ச்சியில் காட்ட மாட்டார்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அவ்வளவு நல்ல நல்ல படங்களில் நடித்தார். நல்லப் பாடல்களைத் தனது படங்களில் வைத்தார். ஆனால் கமல், இந்த நாட்டு மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லும் வகையில் ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா? அவர் நடித்தப் படத்தைப் பார்த்தால் அத்தோடு அந்தக் குடும்பம் காலிதான்’ என்று அதிரடியாக பேசினார்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவும், ‘எனக்கெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. முதல்வருக்கும் அப்படித்தான் இருக்கும். அமைச்சர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல. முற்புதர் மேல் நடப்பது போன்றது இந்தப் பதவி’ என்று கூறியுள்ளார்.