சினிமா
எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய ஆடிட்டர் தான்: விஜய் சேதுபதி விளக்கம்!
மக்கள் செல்வர் என புகழப்படும் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் வருமான வரித்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல என அவரது தரப்பு விளக்கம் அளித்தது. இருந்தாலும் பல்வேறு தகவல்கள் பரவியதை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி நேரடியாக இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, நான் குடும்பத்துடன் லக்னோ சென்றிருந்தேன். நேற்று மதியம் தான் சென்னை திரும்பினோம். வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மைதான். ஆனால், சோதனை நடைபெறவில்லை. ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் வந்தனர். என்னுடைய வீடு, அலுவலகம் மட்டும் இல்லாமல் என் சகோதரியின் வீடுகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
எந்த காலத்திலும் அரசை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. வருமானத்தை நேர்மையாக கணக்கு காட்டி வரிகளை சரியாக செலுத்தி வருகிறேன். கணக்கு வழக்கு விவகாரங்களில் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். சில ஆண்டுகளாக எனக்கு வரி விவரங்களை பார்த்துக்கொண்ட ஆடிட்டரால் வருமான வரியில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த குழப்பத்தை போக்கிக்கொள்ள வருமான வரித்துறையினர் வந்தனர். குழப்பம் தீர்ந்ததால் சென்றுவிட்டனர். ஆடிட்டரின் அலட்சியத்தினால் ஜிஎஸ்டி ஆய்வை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தொழிலில் இந்த அளவிற்கு அலட்சியத்துடன் செயல்பட்ட ஆடிட்டரை மாற்றிவிட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.