உலகம்
இந்தோனேஷியாவில் சுனாமி: பலி எண்ணிக்கை 40-ஆக உயர்வு!
இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுலவாசி தீவை சுனாமி தாக்கியது. இதனால் 40 பேர் உயிரழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவின் மத்தியப் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவு கொண்டது என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுலவாசி தீவின் மேற்கு கடற்கரைப் பகுதி மற்றும் போர்னியோ தீவை உள்ளடக்கிய கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் சுலவாசி தீவிலுள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்தது. இதனால் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுலவாசி தீவிலுள்ளபலூ நகரை நேற்று சுனாமி தாக்கியது.
முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் இந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்த நேரத்தில் உடனடியாக சுனாமி கடலோர பகுதிகளை தாக்கியது. இரண்டு மீட்டர் உயரத்திலான ராட்சஸ அலைகள் ஊருக்குள் புகுந்தது. சுனாமி தாக்கிய பகுதி சுற்றுலாத்தளமான பகுதி என்பதால் உயிரழப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.