தமிழ்நாடு
ரஜினியோடு கூட்டணி என்றால் முதல்வர் வேட்பாளர் யார்? கமல் பதில்
ரஜினியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைந்தால், அதில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். “தமிழகத்தை சீரமைப்போம்” எனும் பெயரில் மதுரையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். விருதுநகர், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘ஒருவர் எங்கள் கட்சியில் சேர்வதற்கு நெற்றியைப் பார்த்து முடிவு செய்ய மாட்டோம். கண்களே அதை முடிவு செய்கிறது. கண்களில் தெரியும் நேர்மை தான் எங்கள் கட்சியில் சேர்வதற்கான முதல் தகுதி.
நான் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுபவன். காந்திக்கு மட்டும் தான் நாங்கள் பீ-டீம். மற்றவர்களுக்கு எப்போதும் ஏ-டீம் தான்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை உருவாக்கி நடத்த வேண்டும் என்பதே எங்களது ஆசை. மக்கள் நீதீ மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைய கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது. ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.