இந்தியா
சபரிமலை தீர்ப்பு: வரவேற்கும் மதுரை ஆதீனம்!
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வரவேற்றுள்ளார். இதனால் கோவிலின் புனிதம் கெடாது என தெரிவித்துள்ளார் அவர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளன. 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மாதவிலக்கு வருவதால் தீட்டு எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர், நரிமன் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இதில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மற்ற நான்கு நீதிபதிகளும் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பளித்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியிருப்பதாவது, சம உரிமையை கொடுத்திருக்கிறது இந்த தீர்ப்பு. சபரிமலைக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் என்று நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேன்.
பாகுபாடு பார்க்காமல் அனைத்து வகையான பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிப்பதுதான் நியாயமானது. இதில் கோயிலின் புனிதன் கெடுவதற்கு எந்த வகையான வாய்ப்பும் இல்லை. மாதவிலக்கு பெண்களால் புனிதம் கெடும் என்கிறார்கள். மாதவிலக்கு பெண்கள் கோவிலுக்கு வருவதை எப்படி சோதனை செய்வீர்கள்? பெண் காவலர்களை நியமிப்பீர்களா?.
ஏமாற்றிச்செல்லக்கூடிய பெண்கள் இருக்கலாம் அல்லவா? அதனால் வயது வரம்பு பார்க்காமல் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தீர்ப்பு கொடுத்திருப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுபவத்தை, ஆற்றலை, முதிர்ச்சியை காட்டுகிறது. கோயிலின் புனிதம் கெடாது என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன். ஒன்றரை ஆண்டுகள் விசாரணை நடத்தி அனுபத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை உண்மையில் பாராட்டுகிறேன் என்றார் அவர்.