செய்திகள்
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்துடன் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் கமல்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது பிரச்சாரத்தை இன்று முதல் ஆரம்பிக்கிறார். இந்நிலையில் இன்று அவர் எங்கெல்லாம் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறித்து மய்யம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மய்யம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்கின்ற மிக உன்னதமான நோக்கத்துடன் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது தலைவர் நமது கட்சியின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வருகின்ற டிசம்பர் 13,14,15,16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில் நமது கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கட்சி உறுப்பினர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டு தலைவர் அவர்களின் சுற்றுப் பயணத்தை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.