செய்திகள்
ஜெயலலிதா நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் கை வெட்டப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைப் பேச்சு
![1 (2) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/1-2.jpg)
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் அவர்கள் கை துண்டிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு, அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டவரின் படத்தை வைத்து அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அவருக்கு அரசு சார்பிலேயே நினைவிடம் அமைக்கப்படுவதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து திமுக தரப்பிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘உலகம் போற்றும் உத்தமத் தலைவி குறித்து விமர்சித்துப் பேச திமுகவினருக்கு அருகதை இல்லை. ஏழரைக் கோடித் தமிழர்களால் விரும்பப்படும் ஒரு அரசியல் தலைவர் குறித்து திமுகவினர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். அதையும் மீறி பேசினால், அவர்களுக்கு ஈடாக பேச எங்களுக்கும் தெரியும். ஆனால், அப்படி செய்ய வேண்டாமென நாங்கள் நினைக்கிறோம்.
ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் கட்டப்படும் நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் அவர்கள் கை வெட்டப்படும். இதை துணிச்சலோடு சொல்கிறேன். தமிழகத்தில் இருக்கும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கை வைத்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்’ என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.