கிரிக்கெட்
அம்பயர் செய்த தவறு: சாதூர்யமாக சுட்டிக்காட்டிய தோனி!
நேற்று முன்தினம் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்திய அணி எளிதாக வெற்றிபெற வேண்டிய இந்த போட்டி சிலரின் தவறால் தோல்வியில் முடிவடைந்தது.
இதில் அம்பயர்கள் செய்த தவறு தற்போது பெரும் தவறாக பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பார்ட் டைம் ஸ்பின்னரான ஜாவீத் அகமதியின் பந்துவீச்சில் இந்திய கேப்டன் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அதேபோல தினேஷ் கார்த்திக்கும் அம்பயரின் தவறான முடிவால் வெளியேற்றப்பட்டார்.
நடுவர்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிகோரி பிராத்வெய்ட், வங்கதேசத்தின் அனிசூர் ரஹ்மான் ஆகியோர் இந்த தவறான முடிவுகளை வழங்கினர். இதனால் நன்றாக சென்றுகொண்டிருந்த ஆட்டத்தின் போக்கு அப்படியே மாறியது. இதுவும் இந்திய அணி வெற்றி பெறாததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் தோனி, சில விஷயங்களால் ஆட்டம் அப்படியே மாறிவிட்டது. அந்த விஷயத்தை நான் இங்கு சொல்ல முடியாது. அதனால் எனக்கு அபராதம் விதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றார். பொதுவெளியில் அம்பயர்களது தீர்ப்பை விமர்சனம் செய்தால் ஐசிசியால் அபராதம் விதிக்கப்படும் என்பதை உணர்ந்த தோனி தனது வார்த்தைகளை சாதுர்யமாக கையாண்டு அம்பயரின் தவறை சுட்டிக்காட்டினார்.