தமிழ்நாடு
கருணாஸை தொடர்ந்து எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார்: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!
சர்ச்சைக்குறிய வகையில் பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாக சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து எச்.ராஜா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எச்.ராஜாவை காவல்துறை கைது செய்யவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரம், ஜாதி கலவரம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களிலும் செயல்படுபவர்கள் அனைவருக்கும் மாமியார் வீடு ஜெயில் தான். அந்தவகையில் சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார். கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக எச்.ராஜா அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.