வணிகம்
தீபாவளிக்கு முன்பு கறிக்கோழி விலை உயரும் அபாயம்!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், தீபாவளிக்கு முன்பு கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளது.
கறிக்கோழி வளர்ப்பில் பல தனியார் நிறுவனங்கள், கோழி பண்ணைகளுடன் ஒப்பந்தம் போட்டு ஈடுபட்டு வருகின்றனர். இந்த பண்ணைகளில் 2 கிலோ முதல் 2.5 கிலோ எடை கொண்ட கறிக்கோழிகள் 40 முதல் 45 நாட்கள் வரை வளர்க்கப்படுகின்றன.
இப்படி கோழி பண்ணை வைத்துள்ளவர்கள் வளர்த்து அளிக்கும் கோழிகளுக்கு, கிலோவுக்கு 4 முதல் 6 ரூபாய் மட்டுமே அளிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த விலை தான் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கோழி பண்ணைகளுக்கு தேவையான தேங்காய் நார் போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவற்றைப் பல முறை உயர்த்தக் கோரி கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்தும், அதற்குத் தனியார் நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை.
எனவே திண்டுக்கல், தருஅப்புரி உள்ளிட்ட சில மாவட்ட கோழி பண்ணையாளர்கள், தங்களது பண்ணைகளில் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் தீபாவளியின் போது கறிக்கோழி விலை உயரும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு சுமுகமான முடிவை எடுக்க உதவ வேண்டும் என்றும் கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.