சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி!
நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினர் மற்றும் பெண் குழந்தை பற்றி, ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாண்டிய ராஜன் உறுதியளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, தமிழின பற்றாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் எதிர்த்து வந்தனர். ஆனால், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் வரை பிரச்சினை ஆகவில்லை. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. செய்தி தொலைக்காட்சிகளில் விவாதமாகவே இந்த விவகாரம் வந்தது.
அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் விஜய் சேதுபதியை அந்த படத்திலிருந்து விலகுமாறும் கோரிக்கை வைத்தனர். அதே நேரம் சில நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவாகவும் பேசினர்.
அதே நேரம் சமூக வலைத்தளத்தில் ஆசாமி ஒருவர், விஜய் சேதுபதி குடும்பத்தினர் மற்றும் அவரது பெண் குழந்தை பற்றி ஆபாசமாகப் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நடிகை ரோகிணி உள்ளிட்டவர்கள் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டிய ராஜன், “விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று அதிமுகவும் கேட்டுக்கொண்டது. அவரும் தற்போது விலகியுள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆபாச கொலை மிரட்டல் விடுத்துள்ள ரவுடி கைது செய்யப்படுவார். அவர் சமூக வலைத்தள ரவுடி தான். கண்டிப்பாகச் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதே போன்று அண்மையில், தோனியின் மகள் மீதும் ஆபாச மிரட்டல் விடுத்த நபர், குஜராத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.