தமிழ்நாடு
தங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்!
தென்காசி கடைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஐ.கே நகைக் கடையில் வாங்கிய விவசாயி ஒருவர் அது போலியான 916 நகைகள் என்று ஏமார்ந்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடை செய்துள்ளது.
விவசாயியான ராமர் கடைய நல்லூரில் உள்ள ஏ.ஐ.கே நகை கடையில், 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி 20 கிராம் கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கியுள்ளார். அன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் 916 தங்க நகை 2,927 ரூபாய் என மொத்த 20 கிராமுக்கு 58,627 ரூபாய் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைய நல்லூரில் உள்ள அடகுக் கடை ஒன்றில், அவசர தேவைக்காகத் தங்கச் சங்கிலியை விற்கச் சென்றுள்ளார்.
அதை வாங்கி உரசிய போது, அது குறைந்த காரட் கொண்ட போலியான தங்கள் நகை என்று தெரியவந்துள்ளது. மேலும் அதை உடை குறைவாகவும் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த விவசாயி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, கடைய நல்லூர் நகை வியாபாரிகள் சங்கத்திடம் அழைத்துச் சென்று முறையிட்டுள்ளனர்.
நகை வியாபாரிகள் சங்கம், அது போலி நகை தான் என்று உறுதி செய்த பிறகு, ஏ.ஐ.கே நகை கடையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இது தவறாக நடைபெற்றுள்ளது. நாங்கள் அதற்கு இழப்பீடாக இன்றைய விலை பணம் அல்லது நகை, மற்றும் இந்த தங்க சங்கிலியை அளித்துவிடுகிறோம் மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால் தரம் குறைவான நகைக்கு ஹால்மார்க் முத்திரை மற்றும் பிஐஎஸ் அங்கிகாரம் எப்படி வழங்கப்பட்டது. இது மிகப் பெரிய மோசடி. எனவே நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டது நகை வியாபாரிகள் சங்கம்.
மேலும் அந்த சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நகை வாங்கியவர்களையும், அது அசல் 196 தங்கம் தானா என்று உறுதி செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.